சட்டத்தரணி ஆஷா கஹவத்த மீது விசாரணை நடத்துமாறு சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு (CCD) அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விளக்கமறியலில் வைத்தமை தொடர்பான நீதிமன்ற உத்தரவை விமர்சித்தமை தொடர்பில், நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதோடு, நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தெரிவித்தே அவர் மீது இவ்வாறு விசாரணை நடாத்துமாறு சட்ட மாஅதிபர் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டமை தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க கடந்த செவ்வாய்க்கிழமை (14) கைது செய்யப்பட்டதோடு, புதன்கிழமை (15) நுகேகொட நீதவானினால் அவருக்கு ஜனவரி 29ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஊடகங்கள் இது தொடர்பில், அவரது சட்டத்தரணி ஆஷா கஹவத்தவிடம் கருத்துக் கேட்டபோது, இவ்வழக்கு தொடர்பில் சந்தேகநபரான தமது கட்சிக்காரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு, இது முற்று முழுதான சட்டவிரோத கைது எனவும் தெரிவித்தார்.
அத்துடன், பிணை வழங்கப்பட்டுள்ள முந்தைய வழக்கின் ஒரு பகுதியை எடுத்து வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும், 3 CDகள் மூலம் ஊடகங்களால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி அழைப்புகளை முறையற்ற விதத்தில் மாற்றி, ஒரு சில விடயங்களை சேர்த்து தயாரிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளே அவை என, தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் இதில், எவருக்கும் எவ்வித தலையீடும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Add new comment