ராஜித சேனாரத்ன CID யின் கட்டுப்பாட்டில்

ராஜித சேனாரத்ன CID யின் கட்டுப்பாட்டில்-Rajitha Senaratne in CID's Control

பிடியாணை மீளப்பெறும் விண்ணப்பம் நீதிமன்றில் நிராகரிப்பு

நாராஹென்பிட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் (CID) கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்னாவிற்கு விதிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப் பெறுமாறு அவர்களது வழக்கறிஞர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் மறுத்துள்ளது.

கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையான லங்கா ஹொஸ்பிட்டலில் நேற்று (26) இரவு 7.40 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் இருதய அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் முன்பிணை கோரியிருந்த நிலையில், சட்ட மாஅதிபரின் உத்தரவுக்கமைய கடந்த செவ்வாய்க்கிழமை (24) நீதிமன்றத்தினால் அவருக்கு பிடியாணை வழங்கப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...