இத்தாலிய பெண் கொலை தொடர்பில் கணவன், மனைவி கைது

 சிலாபம் பரப்பன்முல்ல பிரதேசத்தில் இத்தாலிய நாட்டு பெண் ஒருவரைக் கொலை செய்து தீயிட்டுக் கொளுத்திவிட்டு பரப்பன்முல்ல குளத்தில் போட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கணவன், மனைவி ஆகியோரை நேற்று முன்தினம் பியகம பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இதனை சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.  

இக்கொலை கடந்த மார்ச் மாதம் 01ம் திகதி இடம்பெற்றுள்ளதோடு, கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் காண முடியாதவாறு சடலமாகபொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது. இக்கொலை தொடர்பில் இதற்கு முன்னர் சிலாபம், முகுனுவட்டவான் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

குறித்த இத்தாலி நாட்டு பெண் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்துள்ளார். அப்பெண் கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை வந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான தம்பதியினரின் வீட்டில் தங்கியிருந்த போதே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  கைது செய்யப்பட்டுள்ள தம்பதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்த சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

(புத்தளம் விஷேட நிருபர்) 


Add new comment

Or log in with...