சூதாட்டத்தை தடுக்கும் புதிய சட்டமூலத்தை தடுக்க சதி

அமைச்சர் ஹரீன்

பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு கடந்த (07) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த சூதாட்டம் மற்றும் ஆட்டநிர்ணயம் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்ற அலுவலக அதிகாரிகளின் கவனக்குறைவு மற்றும் ஒருசிலரின் சதித் திட்டத்தினால் நிறைவேற்றப்பட முடியாமல் போனதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பை பிரதமர் விடுத்த விசேட வர்த்தமானி அறிக்கைக்கு அமைய எதிர்வரும் 11ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் (07) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ”இந்த நாட்டின் விளையாட்டுத்துறையில் சூதாட்டம், ஆட்டநிர்ணயம், ஊழல்கள், முறைகேடுகள் உள்ளிட்ட குற்றங்களை புரிகின்றவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான விசேட சட்டமூலத்துக்கான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் அனுமதி கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஆகியன பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. எனினும், பாராளுமன்ற அலுவலக அதிகாரிகளின் கவனக்குறைவால் அதை நிறைவேற்ற முடியாமல் போனது. உண்மையில் இது தற்செயலாக நடந்த ஒரு விடயமாக அல்லது வேண்டுமென்றே யாராவது செய்த சதியாகக் கூட இருக்கலாம்.

குறித்த சட்டமூலத்தை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தவர்களுக்கு எதிராக சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில், இவ்வாறானதொரு முக்கியமான சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாமல் போனது கவலையளிக்கிறது. ஏனெனில் ஜனாதிபதி தேர்தலில் நாம் தோற்றால் இந்த சட்டமூலத்தைக் கொண்டு வருவதற்கு நாம் இவ்வளவு நாட்கள் எடுத்த முயற்சிகள் வீணாகிப் போய்விடும்.

இந்த நாட்டின் சட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமாயின், விளையாட்டைப் பயன்படுத்தி சூதாட்டம் மற்றும் ஆட்டநிர்ணயம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுக்கு தண்டணை வழங்குவதில் என்ன தவறு இருக்கின்றது” என அமைச்சர் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

குறித்த சட்டமூலம் அமுலுக்கு வந்தால் ஆசியாவிலேயே விளையாட்டுத்துறையில் குற்றம் புரிகின்றவர்களுக்கு தண்டனை வழங்குகின்ற முதல் நாடென்ற பெருமை இலங்கைக்கு கிடைக்கும்.

அதுமாத்திரமின்றி, சூதாட்டம் மற்றும் ஆட்டநிர்ணயம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுக்கு உயர்நிதீமன்றத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வழக்கு விசாரணைகளின் பிறகு அதிகபட்சமாக 100 மில்லியன் ரூபா அபராதத்துடன், 10 வருடங்கள் சிறைத் தண்டணை விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு.

தகவல்களை மறைப்பவர்களுக்கு 3 இலட்சம் ரூபா அபாரதத்துடன், 2 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதேநேரம், குறித்த குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குகின்ற நபருக்கு சன்மானமும் வழங்கப்படும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.


Add new comment

Or log in with...