போலி நாணயத்தாள்களுடன் ஐவர் கைது

போலி நாணயத்தாள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொரலஸ்கமுவ பகுதியில் 05 பேர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலையொன்றுக்கு வந்த சந்தேகநபர் ஒருவர், மதுபானம் வாங்கும் நோக்கில்  5,000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாளை வழங்கியபோது, இது தொடர்பாக பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதற்கமைய 5,000 ரூபா போலி நாணயத்தாள்கள் மூன்றுடன் குறித்த சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இச்சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட இடத்தில் சோதனை நடத்தப்பட்டதோடு, மேலும், 04 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபர்களிடமிருந்து 5,000 ரூபா  போலி நாணயத்தாள்கள் ஏழு, மடிகணனி மற்றும் ஸ்கேனர், பிரின்டர் ஆகியன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் பொரலஸ்கமுவ, கணேமுல்ல, வீரகெட்டிய, பெல்லம்பல மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இச்சந்தேகநபர்களை நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

 

 

 

 


Add new comment

Or log in with...