நாவிதன்வெளியில் சம்பவம்
ஹஜ்ஜுப் பெருநாளை தனது குடும்பத்தாருடன் இலங்கையில் கொண்டாட வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை வந்த நபர் ஒருவர், பெருநாள் தினத்தன்று (12) விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நாவிதன்வெளிப் பிரதேசத்திலுள்ள சாளம்பைக்கேணி 05 இல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்வம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, பெருநாள் தினத்தன்று காலை தனது மூத்த பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் அயற்கிராமத்திலுள்ள தாயின் வீட்டிற்கு சென்று திரும்பியவேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.
றனீஸ் என்ற பெயருடைய 03 பிள்ளைகளின் தந்தையான 30 வயது நபரே இவ்வாறு படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் மூவர் படுகாயமுற்ற நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சவளக்கடை மற்றும் மத்திய முகாம் பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
(நாவிதன்வெளி தினகரன் நிருபர் - எம்.ஏ.அர்.எம். முஸ்தபா)
Add new comment