இலங்கை கடற்படையின் 23 ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் கே.கே.டி.பி.எச். டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று (31) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார். இதன்படி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா 2019 ஜனவரி 01ஆம் திகதி முதல் புதிய கடற்படைத் தளபதியாக தனது பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையின் 22 ஆவது கடற்படைத்தளபதியாக இதுவரை காலம் செயற்பட்டு வந்த வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்ஹ இன்று (31) தனது சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்வதையடுத்தே கடற்படையின் பிரதம அதிகாரியாக செயற்பட்டுவந்த ரியர் அட்மிரல் பியல் டி சில்வா புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1964 ஆம் அண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி தென் மாகாணத்தின் அம்பலங்கொட பிரதேசத்தில் பிறந்த புதிய கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, 1984 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி இலங்கையின் கடற்படையில் இணைந்து கொண்டதுடன், தனது ஆரம்ப பயிற்சியை முடித்துக்கொண்டு 1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி கடற்படை அதிகாரியாக வெளியேறிய அவர், கடற்படையின் உயர் பதவிகள் பலவற்றை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஓய்வுபெற்றுச் செல்லும் 22 ஆவது கடற்படைத் தளபதியான சிறிமேவன் ரணசிங்ஹ அட்மிரலாக இன்று (31) ஜனாதிபதியினால் தரமுயர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமவன் சரத்சந்திர ரணசிங்க ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
(ஸாதிக் ஷிஹான்)
Add new comment