பதுளை - ஹாலிஎல கெட்டவெல ஜகுல்ல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் பணிபுரியும் 23 வயது சந்திமா பியதர்ஷனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விடுமுறையில் வீட்டுக்கு வந்த இவர் அன்றைய தினம் இரவு தனது காதலனுடன் உறவினர் வீடொன்றுக்கு சென்றுவிட்டு வந்த பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதோடு இதன் போது காதலன் இவரை கடுமையாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. பின்னர் அவரை வீட்டிற்குள் வைத்து தீயிட்டு எரித்துள்ளதாகவும் அறிய வருகிறது.
இது தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்துள்ளனர்.
பெரும் முயற்சிக்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும் பெண் கான்ஸ்டபிள் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த கொலை தொடர்பில் பெண் ெகான்ஸ்டபிளின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)
Add new comment