பொல்கஹவெல புகையிர நிலையத்திற்கு அருகில் பனலிய பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தையடுத்து புகையிரத பாதையில் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.
நேற்று (06) பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்து காரணமாக, சம்பவ இடத்திலிருந்த இரு பாதைகளும் சேதமுற்றிருந்தது.
அதனையடுத்து மேற்கொண்ட துரித திருத்தப் பணிகளை அடுத்து, குறித்த பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளதோடு, தற்போது பிரதான புகையிரத பாதையிலான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக, பிரதான கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில், புகையிரதத்தை செலுத்திய புகையிரத சாரதி, சாரதி உதவியாளர், புகையிரத காவலர், உதவி காவலர் ஆகியோர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதற்கான முடிவுகள் வரும் வரை அவர்கள் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, புகையிரத மேலதிக முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்திருந்தார்.
இதேவேளை, குறித்த விபத்து தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு புகையிரத முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்ரமவிற்கு, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில், புகையிரத முகாமையாளர் தலைமையிலான மூவரடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment