டி.கே.பி தசநாயக்கவின் விளக்கமறியல் நவ 01வரை நீடிப்பு

 

பதினொரு இளைஞர்களின் கடத்தல் மற்றும் காணாமற்போதலுடன் தொடர்புபட்டாரென்ற சந்தேகத்தின்பேரில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினதும் விளக்கமறியல் நவம்பர் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னொரு சந்தர்ப்பத்தில் இச்சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் முன்னாள் கடற்படைப் பேச்சாளர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியபடி சிறைச்சாலை அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் கொண்டு வந்து ஆஜர் செய்தனர்.

2008 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சி.ஐ.டி விசாரணைகளின்போது வெலிசரவில் அமைந்துள்ள கடற்படைத் தளத்தில் வைத்து முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கைது செய்யப்பட்டார். மேற்படி இளைஞர்கள் 2008 மற்றும் 2009 ஆகிய காலப்பகுதியில் தெஹிவளை, பத்தரமுல்லை மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 


Add new comment

Or log in with...