பொலிஸாரின் தரப்பில் எந்த தவறும் கிடையாது

கஜேந்திரகுமார் எம்.பி. விவகாரம்

அமைச்சர் டிரான் அலஸ்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தொடர்பான விவகாரத்தில் பொலிஸாரின் தரப்பில் எந்தகைய

தவறும் கிடையாதென, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேற்படி இவ்விவகாரம் தொடர்பில் நேற்று சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டபோது, பொலிஸாரைப் பார்த்து ''வாயை மூடு'' எனக்கூறும் உரிமை எவருக்கும் கிடையாது என்றும் பாராளுமன்ற உறுப்பினரல்ல எவர், அவ்வாறு கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிதி, பொருளாதார உறுதிப்படுத்துகை மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராசா கஜேந்திரன் உரையாற்றினார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பதில் வழங்கினார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு மிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கைது தொடர்பான கஜேந்திரன் எம்.பி.யின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்,

இச்சம்பவம் தொடர்பில் நான் முதல் நாளே அறிக்கை கோரினேன். அது தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோக்களையும் பார்வையிட்டேன். அதில் கஜேந்திரகுமார் எம்.பி ஒரு கௌரவ உறுப்பினராக நடந்து கொள்ளவில்லை. பொலிஸ் அதிகாரிகளை ''வாயை மூடு''என தரக்குறைவாக பேசியதையும் நான் அவதானித்தேன். பரீட்சை மண்டபத்தை அண்மித்த பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாருடன் முரண்படும் வகையில் உரையாடியுள்ளார்.

ஒரு பொலிஸ் அதிகாரியின் கழுத்துப் பகுதியை பிடித்து இழுத்துள்ளார்.அதனைத் தொடர்ந்து அந்த பொலிஸ் அதிகாரி அவ்விடத்திலிருந்து ஓடியுள்ளார்.இவரும்,அங்கு கூடியிருந்தவர்களும் அவரை பின்தொடர்ந்து ஓடியுள்ளனர். ஆகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி பொலிஸாருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என்பது உறுதியாகிறது.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, சிவில் உடையில் வந்தவர்கள் பொலிஸ் எனக் குறிப்பிட்டார்கள்.நான் அதற்கான அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவில்லை.பொலிஸ் என்று குறிப்பிட்டுக் கொண்டு சிவில் உடையில் படுகொலையில் ஈடுபட்ட சம்பவங்கள் நாட்டில் பல உள்ளன.

பொலிஸ் சீருடையில் இருந்தவருடன் நான் வாக்குவாதம் செய்யவில்லை.வேலிக்குப் பின்னால் ஆயுதமேந்திய பொலிஸார் சீருடையில் இருந்தார். அவர் எதுவும் பேசவில்லை.

சிவில் உடையில் இருந்தவர்தான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஆகவே, முதற்கட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றீர்கள். அந்த அறிக்கை மற்றும் காணொளிகளை சபைக்கு சமர்ப்பியுங்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், அந்த காணியின் வேலிக்கு பின்னால் இருந்த பொலிஸ் அதிகாரியிடம் நீங்கள் முறையற்ற வகையில் கதைத்துள்ளீர்கள்.என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? எனக்கேட்டார். இதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் எம்.பி சீருடையில், ஆயுதமேந்திய நிலையில் இருந்த பொலிஸ் அதிகாரியுடன் நான் அவ்வாறு பேசவில்லை என்றார்.

இதன் போது குறிப்பிட்ட அமைச்சர், பொலிஸ் அதிகாரியை நோக்கி நீங்கள் ''நீ வாயை மூடு'', என முறையற்ற வகையில் கதைத்துள்ளீர்கள். பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்காக அவ்வாறு கதைக்க முடியாது. இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பொலிஸ் சேவைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...