பாடசாலைகளில் பாழடைந்த கட்டடங்களை புனரமைக்க அவசர வேலைத் திட்டம்

- பாடசாலைகளின் பெறுபேறுகளின் முடிவுகளை ஆய்வு செய்யும் முறை
- அதிபர் பதவிகளை சிரேஷ்டத்துவம் அல்லது வேண்டப்பட்டவர் அடிப்படையில் வழங்க வேண்டாம்
- சுற்றறிக்கையில் சிக்காமல், தொழிற்சங்கங்களுக்கு அடிபணியாமல் சரியான தீர்மானம் எடுக்கவும்

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாழடைந்த கட்டடங்களை புனரமைக்கும் அவசர வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மாகாண கல்வி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், பாடசாலைகளின் பெறுபேறுகளை தொடர்ச்சியாக ஆராயும் முறைமை ஒன்றை அமைக்கவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

நேற்று (21) மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேசங்களின் கல்விக் கட்டமைப்புக் குழு கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:

தற்போது பாடசாலைகளில் அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் ஏராளம். எங்களுக்கு பொருளாதார பலம் அதிகம் இல்லை. எனவே இவற்றை கட்டி முடிக்க ஏற்பாடு இல்லை. இவை முன்பு தொடங்கப்பட்ட கட்டுமானங்கள்.

மேலும், குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் அதிக பணம் செலவழிக்கின்றன. அப்படி நடக்கக் கூடாது. ஒரு பாடசாலைக்கு அதிபர் நியமிக்கப்படும்போது, அவரது முந்தி இருந்த பாடசாலையின் நிலை, அவரது பணி, பணி மூப்பு ஆகியவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சில நேரங்களில் இந்த அதிகாரிகளுக்கு நட்பின் அடிப்படையில் அதிபர் பதவிகள் வழங்கப்படுகின்றன. சிரேஷ்டத்துவம் இருந்த போதிலும் வேலை செய்ய முடியாது. மக்கள் கடந்த காலத்தில் சிஸ்டம் மாற வேண்டும் என்று கூறியது இவற்றை மாற்றத்தான்.

பாடசாலையின் அதிபர் சரியாக வேலை செய்யவில்லை என்றால், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் அந்த அதிபரை நீக்கவும். புதிதாக ஒருவரை அங்கே நியமியுங்கள். பாடசாலை பெறுபேறுகளை எப்போதும் பகுப்பாய்வு செய்யுங்கள். அதற்கு புதிய மாணவர்களைச் சேர்த்து ஒரு சிறிய செயல்பாட்டுத் பிரிவை உருவாக்குங்கள். முடிவுகளை எடுக்க பயப்பட வேண்டாம். என்னுடைய அமைச்சிலும் நான் அப்படித்தான். வேலை செய்ய முடியாத சிரேஷ்ட நபர்களை ஒதுக்கி வைத்துவிட்டு இரண்டாம் தலைமுறையினருடன் இணைந்து பணியாற்றுகின்றோம். புதிய மனிதர்களுடன் புதிய பயணம் செல்வோம்.

இதறற்கும் எமக்கும் தொடர்பில்லை. ஆனால், அரசியல்வாதிகளுக்குத்தான் திட்டுகிறார்கள். போராட்டக்காரர்கள் எமது வீடுகளுக்கே தீ வைத்தார்களேயன்றி அரசியல்வாதிகளின் வீடுகளுக்கல்ல. சரி, தவறு என்று பேச கல்வி கட்டமைப்புக் குழுக்கள் கூட்டப்பட வேண்டும். இந்தக் கட்டமைப்புக் குழுக்கள் மூலம் நாம் கல்வியில் செல்வாக்குச் செலுத்துவதில்லை. ஆனால் கிடைக்கும் தகவலுக்கமைய பணியாற்றுகிறோம்.

எப்படியும் ஒரு வகுப்பில் 40 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதை நான் எதிர்க்கிறேன். மினுவாங்கொடை பிரதேசத்தில் 40 பிள்ளைகளை ஒரு வகுப்புகளுக்கு எடுக்க வேண்டாம் என்று நான் அவர்களிடம் கூறினேன். அரசாங்க கல்வியில் திருப்தி இல்லாமையினாலேயே, தனியார் பாடசாலைகளுக்கு செல்கின்றனர். இந்நிலையை மாற்றுவோம்.

நான் மாகாணசபையில் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட “எமது பாடசாலையை - எமது கைகளாலேயே காப்பாற்றுவோம்” என்ற செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம்.

புதிய ஆசிரியர்களுக்கு கஷ்ட பிரதேசங்களுக்கு நியமனங்களை வழங்குங்கள். கம்பஹாவில் வசிக்கும் சிலர் இன்னும் 10 வருடங்களுக்கு மேலாக நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மாகாணங்களில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் நியமனம் கொடுங்கள்.

ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் போது சுற்றறிக்கைகள் குறுக்கிடும். தொழிற்சங்கங்கள் சத்தம் போடும். அவர்கள் சொல்வதை செய்ய முடியாது. அந்த சுற்றறிக்கைகள் அதிகாரிகளால் உருவாக்கப்படுகின்றன. அதில் மாட்டிக்கொண்டு வேலை செய்ய முடியாது. மாகாணக் கல்வி ஆலோசனைக் குழுக்களை நடத்தி இந்தப் பிரச்சினைகளை உரையாடுவோம். நான் முதலமைச்சராக இருந்த போது இதனைச் செய்தேன். சமீபத்தில் இது நிறுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினைகள் தான்  தொடர்ந்து வருகின்றன.

நான் ஒரு அரசியல்வாதி. எல்லா வகையான மக்களும் என்னிடம் வருகிறார்கள். நான் பழிவாங்கும் நோக்கில் வேலை செய்யவில்லை. நான் சொல்வது தவறு என்றால் அதை செய்யாதீர்கள். ஆனால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

இந்நிகழ்வில் மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, கோகிலா ஹர்ஷனி குணவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, மாகாண கல்விச் செயலாளர் சிறிசோம லொக்குவிதான, மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.வஜிர ரணராஜ பெரேரா, கம்பஹா வலயக் கல்விப் பணிப்பாளர் அநுர பிரேமலால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.           


Add new comment

Or log in with...