- 10 ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்து அதில் முன்னணி வகியுங்கள்
- கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழிநுட்ப வளர்ச்சியுடன் உலகம் முழுவதுமே அறிவுப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டு கால அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால் அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களின் 2023ஆம் ஆண்டுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தின் 40 ஆண்டு நிறைவை முன்னிட்டு, முன்னாள் மாணவர் சிகரம் விருது (Alumni Pinnacle Awards) வழங்கும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டுக்கும் சமூகத்திற்கும் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் தனித்துவமான பணியை ஆற்றும் பழைய மாணவர்களை பாராட்டும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது விருது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மல்வத்து தரப்பு அனுநாயக்க வண, திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பேராசிரியர் ஜே.பி. திசாநாயக்க, திலக் கருணாரத்ன உள்ளிட்ட 11 பேர் இங்கு விருதுகளைப் பெற்றனர்.
முழுமையான பல்கலைக்கழக கட்டமைப்பிலும் நவீனமயப்படுத்தலின் தேவை இருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய உடனடித் தீர்வகளை கண்டறியுமாறும் கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
இந்த 10 வருட கால அபிவிருத்தித் திட்டத்தை விரைவில் தயாரிப்பதற்கு தங்களை அர்ப்பணிக்குமாறு பழைய மாணவர்களிடம் மேலும் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு செய்யாவிட்டால் கொழும்பு பல்கலைக்கழகம் அந்த விசேட செயற்பாட்டிற்கு பங்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க மற்றும் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எச்.டி. கருணாரத்ன, பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் ஜே.எம்.எஸ். பண்டார உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Add new comment