- சம்பவம் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்
களுத்துறை, நாகொட பகுதியில் ஹோட்டல் ஒன்றுக்கு பின்னால் புகையிரத பாதைக்கு அருகில் நிர்வாணமான நிலையில் மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான மூவருக்கும் மே 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களுக்கு இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் குறித்த விடுதியில் மற்றொரு அறையில் தங்கியிருந்த ஜோடி கைது செய்யப்பட்ட நிலையில், மாணவியை விடுதிக்கு அழைத்து வந்த கார் சாரதி நேற்று கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் (06) மாலை 6.30 மணியளவில் குறித்த மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் அப்பகுதியில் உள்ள விடுதிக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
அவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து அந்தந்த விடுதியில் 2 அறைகளை முன்பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் 2 அறைகளை முன்பதிவு செய்த போதும், 4 பேரும் ஒரே அறையில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்ததை விடுதி ஊழியர் ஒருவர் பார்த்துள்ளார்.
பின்னர், யுவரி ஒருவரும் இளைஞனும் விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, மற்ற இளைஞனும் பீதியுடன் விடுதியை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
அப்போது விடுதிக்கு உணவு உட்கொள்வதற்கு வந்த நபர் ஒருவர் விடுதியை அண்மித்த புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் பெண் ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக விடுதி ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது குறித்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
களுத்துறை பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் 16 வயதுடைய நாகொட பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி விடுதிக்குள் செல்வதற்கு வயது தடையாக உள்ளதால் வேறு ஒருவரின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து விடுதிக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
திடீரென விடுதி அறையை விட்டு பீதியுடன் வெளியேறிய இளைஞன், முன்னதாக விடுதியில் இருந்து வெளியேறிய இளைஞனுக்கும், யுவதிக்கும் அழைப்பை ஏற்படுத்தி அவசரமான விடயம், வருமாறு அழைப்பை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த சிறுமி மூன்றாவது மாடியில் இருந்து ரயில் தண்டவாளத்தில் குதித்ததாக கூறிய பின்னர் காரில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், மற்றைய இளைஞனும், யுவதியும் மாணவியின் சடலத்தை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறி இரவு 9.30 மணியளவில் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமியுடன் தங்கியிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளதோடு, இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணிடம் அவர் தொடர்பில் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை கைது செய்ய களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Add new comment