2009 இலங்கை அணி மீதான தாக்குதல்; தேடப்பட்டு வந்த நபர் பாக். பொலிஸாரால் சுட்டுக் கொலை

லாகூரில் கடந்த 2009 இல் இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த, பாலி கயாரா எனப்படும் இக்பால் பாகிஸ்தான் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அல்-கொய்தா மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) கயாரா குழுவைச் சேர்ந்த பயங்கரவாதியான இவர், தேரா இஸ்மாயில் கான் எனும் இடத்தில் உள்ள ஃபதே மூர் அருகே பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவராக இருந்த இக்பாலை, உயிருடனோ, சடலமாகவோ பிடிப்பவருக்கு, ரூ. 10.5 மில்லியன் வெகுமதி வழங்குவதாக, கைபர்-பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் பொலிஸார் அறிவித்திருந்தனர்.

குறித்த பயங்கரவாதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைபர்-பக்துன்க்வா பொலிஸ் மாஅதிபர் (IGP) அக்தர் ஹயாத் கான், நேற்றையதினம் வியாழக்கிழமை தனியார் தொலைக்காட்சி அலைவரிசைக்கு பேட்டியளிக்கையில், இக்பால் குழுவினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில், அவரது கூட்டாளியுடன் இக்பால் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இக்பால், 26 பயங்கரவாத வழக்குகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகளில் தேடப்பட்டு வரும் ஒருவர் எனத் தெரிவித்த அவர், குறிவைக்கப்பட்ட கொலைகள், பயங்கரவாதம் மற்றும் ஷியா முஸ்லீம்களைக் கடத்தியதாக 21 வழக்குகளில் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, மேலும் 5 வழக்குகளில் முல்தான் பொலிஸாரால் அவர் தேடப்பட்டு வந்தார்.

மாவட்ட தலைமையக மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் மற்றும் 2009 இல் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் ஆகியவற்றிலும் இக்பால் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 இல் பாகிஸ்தான் சென்றிருந்த இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் மீது அந்நாட்டின் தலைநகரான லாகூரில் வைத்து பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 6 பாகிஸ்தான் பொலிசார் மற்றும் 2 பொதுமக்கள் கொல்லப்பட்தோடு, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலில் மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, அஜந்த மெண்டிஸ், திலான் சமரவீர, தரங்க பரணவிதான, சமிந்த வாஸ் உள்ளிட்ட 7 வீரர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் வரை சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் பல வருடங்களாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்ததோடு, பாதுகாப்பு மேம்பட்ட பின்னரே விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. ஆயினும் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்வதை தொடர்ந்தும் தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லாகூர் தாக்குதல் சம்பவம் தொடர்பில், அத்தாக்குதலை திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படும் மற்றுமொரு முன்னணி பாகிஸ்தானிய போராளித் தலைவரான காரி அஜ்மல், நேட்டோ மற்றும் ஆப்கானிஸ்தான் துருப்புக்களின் கூட்டு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...