ஓமான் நாட்டு ஆடைத் தொழிற்சாலை பணிப்பாளர் மீது தாக்குதல்

- பிரதேச அரசியல் பிரமுகருக்கு தொடர்பு உள்ளதாக தெரிவிப்பு

கட்டான பிரதேசத்தில் உள்ள ஓமான் நாட்டு ஆடை தொழிற்சாலையின்  நிர்வாக பணிப்பாளர் கல்ஃபான் அல் ஒபைதானி என்பவர் அடையாளம் தெரியாத கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

நேற்று (30) இரவு 10.30 மணியளவில் குறித்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அவரது பங்களாவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, தாக்குதலின் போது அவர் தங்கி இருந்த பங்களாவும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த கும்பல்களால் தாங்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருவதாக ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தாக்கப்பட்ட கல்பான் ஒபைதானி (55 வயது) தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆடை தொழிற்சாலை  காவலாளியும் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதோடு இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒமான் அல் ஒபைடானி ஆடை பிரைவேட் லிமிடெட் என்பது ஓமானில் முன்னணி ஆடை தொழிற்சாலையான அலோபைடானி ஸ்டோரின் சகோதர நிறுவனங்களில் ஒன்றாகும்.

நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வரும் நிலையில் இவ்வாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஆளும் தரப்பு  மற்றும் எதிர்த் தரப்பு  அரசியல்வாதிகள் பலரும் கண்டித்துள்ளனர்.


Add new comment

Or log in with...