நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்ப அறிவை மாணவர் பெற வேண்டும்

கொழும்பு ஆனந்தா கல்லூரி பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

எமது நாட்டின் மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நான்கு வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர், அதே பழைய முறையைப் பின்பற்றுவதா அல்லது புதிய முறையின் ஊடாக முன்னேறி வரும் உலகத்துடன் முன்னோக்கிச் செல்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் 135 ஆவது வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்றுமுன்தினம் (29) முற்பகல் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2020-_2021 ஆண்டுகளில் திறமை செலுத்திய மாணவர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டார்கள்.

கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி முதலில் மதவழிபாடுகளில் ஈடுபட்டார். ஜனாதிபதிக்கு கல்லூரி சாரணர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள போர் வீரர்களின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தேசிய, மத, கலாசார, அரசியல், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி இன அமைதிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சுபசன் ஆனந்திய நபர் ஒருவருக்கு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் 'ஆனந்தபிமானி' விருது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டதோடு, தனது பாடசாலை வாழ்க்கையின் போது சகல துறைகளிலும் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த ஆனந்த மாணவருக்கான 'பிரிட்ஸ்கூன்ஸ்' விருது டபிள்யூ. எஸ். நிம்சத்திற்கு ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:

"பசுமை ஹைட்ரஜன் என்பது எதிர்காலக் கப்பல்களை இயக்கும் முக்கிய வலுசக்தி . எம்மிடம் பச்சை எமோனியா உள்ளது. அதற்காக திருகோணமலையை பிரதான துறைமுகமாக மாற்ற வேண்டும். இவற்றின் ஊடாக , வலுசக்தி மிகுதியான நாடாக மாறும். அதிலிருந்து நாம் கார்பன் கிரடிட்டை பெறலாம். ஏனைய நாடுகள் எங்களிடம் இருந்து கார்பன் கிரெடிட்களை வாங்கும். இயற்கையை வளர்க்கும் போது அதற்காக எமக்குப் பணம் கிடைக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு நம் கடனைக் குறைக்கலாம். நம் கையில் பாரிய சக்தி இருக்கிறது. அவற்றை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக, சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும். இன்று, மாலைதீவு சுற்றுலாத்துறையில் முன்னணியில் உள்ளது. நாடு முழுவதும் கடற்கரைகள் உள்ளன. எங்களுக்கெனத் தனித்துவமான கலாசாரம் உள்ளது. பௌத்த மற்றும் இந்துமத ஸ்தலங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அண்டை நாடான இந்தியா இன்று வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியா முன்னேறுவதற்கு சில மூலப்பொருட்கள் அங்கே இல்லை. உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும். அவர்களின் துறைமுகத்தில் போதிய இடவசதி இல்லை. எனவே கொழும்பை பாரிய துறைமுகமாக மாற்ற வேண்டும். புதிய தெற்கு துறைமுகத்தைப் போன்றே வடக்கு துறைமுகமும் உருவாக்கப்பட்டது. கடல்சார் பொருளாதாரத்தை நாம் உருவாக்க முடியும். இதுவரை எந்த ஒரு நாடும் இதனைச் செய்யவில்லை. நாம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

நம்மிடம் தகவல் தொழில்நுட்பம் இருக்கிறது.இதில் முக்கிய அங்கம் செயற்கை நுண்ணறிவை பெறுவது. எதிர்காலத்தில், நாங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்குச் செல்ல வேண்டும். மற்றைய நாடுகளை விட முன்னேறும் நாடாக மாற்ற வேண்டும். அத்தகைய நாட்டைக் கட்டியெழுப்ப புதிய தலைவர்கள் தேவை. எங்களால் வழிகாட்ட மட்டுமே முடியும். இளைஞர்களாகிய நீங்கள்தான் தலைமைத்துவத்தைப் பெற வேண்டும்.

77 ஆம் ஆண்டில் ஜே.ஆர் கூட 'அது உங்கள் எதிர்காலம்' என்றுதான் கூறினார். அதனால் நல்லது, கெட்டது இரண்டும் வளர்க்கப்பட்டன. இப்போது நானும் உங்கள் எதிர்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தச் சவாலை ஏற்க முடியுமா? நமது எண்ணங்களின்படி சமுதாயத்தை மாற்றுவது பயனற்றது. இளைஞர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் உள்ளனர். அந்த சமூகத்திற்குச் செல்லுங்கள். எல்லாவற்றினதும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தப் பாடசாலையிலுள்ள திறமையானவர்கள் முன்னேறிச் செல்வார்கள். சவால்கள் இருந்தால் அதனை ஏற்க பயப்பட வேண்டாம். சவால்களை ஏற்றுக்கொண்டால் தோற்றுவிடுவோம் என்று நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. சவால்களை யோசிக்காமல் ஏற்றுக்கொண்டால் முன்னேறிச் செல்ல முடியும்.

19ஆம் நூற்றாண்டில் நவீன இலங்கையை உருவாக்க ஆனந்தா முன்னோடியாகச் செயற்பட்டது. எனவே 20 ஆம் நூற்றாண்டில் முன்னோடியாக செயற்படுங்கள். இந்த மாற்றங்களை ஒரு வருடத்தில் செய்ய முடியாது. பத்து, பதினைந்து, இருபது வருடங்கள் ஆகலாம். இது உங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது. இன்னும் 25 ஆண்டுகளில் உங்கள் வயது என்ன? இங்குள்ள யாரும் 50 வயதுக்கு மேல் வயதாகியிருக்க மாட்டீர்கள். 45 முதல் 55 வயது வரை இருக்கும். எனவே உங்கள் எதிர்காலத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்.

குடியரசு உருவாக்கப்பட்டு நூறு ஆண்டுகள் கடக்கும் முன்பே சீனா வளர்ந்த நாடாக மாற்றப்படும் என்று கூறப்பட்டது. குறிப்பாக அந்த ஆண்டுக்கு 2048 என்று பெயரிட்டோம். நூற்றாண்டு விழாவுக்கு முன் நவீன இந்தியா உருவாகும் என்று பிரதமர் மோடி கூறினார். அதாவது 2047ஆம் ஆண்டில். ஏன் நம்மால் முடியாது? அந்த சவாலை நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்களும் நாமும் அதனைச் செய்யலாம்".

இவ்வாறு ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

வண. ரங்வல தம்மரக்சித்த தேரர், வண. ஓனகம உபாலி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, ரஞ்சித் மத்தும பண்டார, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, ஆனந்த கல்லூரி அதிபர் லால் திசாநாயக்க, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...