ஒரு சில தொழிற்துறைக்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

- வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்

- இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள்

ஒருசில தொழிற்றுறைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், உபகரணங்கள், பயன்பாட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இயலுமாகும் வகையில் 2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள் மூலம் விதிக்கப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கீழ்க்காணும் ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாட்டு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது :

  • அரச துறையின் இறக்குமதிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட துறைகளில் நடவடிக்கை ஒத்துழைப்புக்களை உறுதிப்படுத்துவதற்காக ஒருசில தொழிற்றுறைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், உபகரணங்கள் மற்றும் பயன்பாட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இயலுமாகும் வகையில் 2022.08.23 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் விதிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்
  • நிலவுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு அந்நியச் செலாவணிப் பணத்திரவத்தன்மையை முகாமைத்துவம் செய்வதற்காக இலங்கை மத்திய வங்கி பரிந்துரைகளின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்டுள்ள பொருட்கள் பலவற்றை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு 2022.08.23 திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் விதிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்.

2. தேசிய இலக்கியக் கலைப் பெருவிழா நடாத்துதல்
இலக்கியம், கலை, அழகியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளை மேம்படுத்துவதற்காக அரச இலக்கிய விருது விழா, தேசிய இலக்கிய விழா மற்றும் தேசிய இலக்கிய பெருவிழா வருடாந்தம் நடாத்தப்பட்டு வருகின்றது.

தற்போது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் குறித்த விழாக்களை இவ்வாண்டில் நடாத்துவது உகந்ததாக அமையாததால், அதற்குப் பதிலாக, குறித்த இலக்கிய விழாவின் அனைத்து தனித்துவமான பண்புகளை உள்ளடக்கிய வகையில் 'தேசிய இலக்கிய கலைப் பெருவிழா' நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 2022 ஒக்ரோபர் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டப வளாகத்தில் அரச துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து இவ்விழாவை நடாத்துவதற்காக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.  

3. இலங்கை காலநிலை மாற்றங்கள் தொடர்பான மூன்றாவது தேசிய தொடர்பாடல்கள் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான வேலைச்சட்டக சமவாயத்திற்குச் சமர்ப்பித்தல்   
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான வேலைச்சட்டக சமவாயத்தின் பங்காள அரசாக இலங்கை சமகால காலநிலை மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது.

அதற்கமைய, 2000 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் முதலாவது மற்றும் இரண்டாவது தொடர்பாடல் அறிக்கையில் காலநிலை, பொருளாதார மற்றும் சமூகச் சூழல், தேசிய பச்சைவீட்டு விளைவு வாயுக்கள் வெளியேற்றம், குறைப்பு மற்றும் கடந்தகால போக்குகள் பற்றிய தகவல் பட்டியல், பச்சைவீட்டு விளைவு வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்கின்ற செயற்பாடுகள், காலநிலை மாற்றங்கள் தொடர்பான இடர்கள் மற்றும் அவற்றுக்கு இசைவாக்க நடவடிக்கைகள், கல்வி, பயிற்சி மற்றும் இயலளவு விருத்தி, தொழிநுட்ப பரிமாற்றங்கள், ஆய்வுகள் மற்றும் முறைசார்ந்த கண்காணிப்புக்கள் போன்றன உள்ளடக்கப்படல் வேண்டும்.

அதற்கமைய, காலநிலை மாற்றங்கள் தொடர்பாக நிபுணர் குழு மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக் கொண்டு சுற்றாடல் அமைச்சால் இலங்கையில் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மூன்றாவது தேசிய தொடர்பாடல்கள் அறிக்கை – 2018-2021 தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான வேலைச்சட்டக சமவாயத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. சுகாதார அமைச்சுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ  உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான நிதியிடல்
நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கு ஒத்துழைக்கின்ற கருத்திட்டம் மற்றும் இடர்களைக் குறைக்கின்ற படிமுறைகள் மூலம் மண்சரிவு இடர்களைக் குறைக்கின்ற கருத்திட்டம் போன்ற கருத்திட்டங்களின் விடயதானங்களைத் திருத்தம் செய்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் துரிதமாக வழங்குவதற்கு அவ்வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கு ஒத்துழைக்கின்ற கருத்திட்டத்தின் மூலம் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் இடர்களைக் குறைக்கின்ற படிமுறைகள் மூலம் மண்சரிவு இடர்களைக் குறைக்கின்ற கருத்திட்டத்தின் மூலம் 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ  உபகரணங்களைக் கொள்வனவுக்குப் பயன்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை நிறுவுதல்
சமகால நெருக்கடியான பொருளாதார நிலைமையில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அதிக முன்னுரிமை வழங்கி மேற்கொள்ள வேண்டிய படிமுறைகள் தொடர்பாக துரிதமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

அதற்கமைய, தேசிய பொருளாதார முகாமைத்துவப் பணிகளுக்குத் தேவையான மூலோபாய ரீதியான வழிகாட்டல்களை வழங்குவதற்காக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை நிறுவுது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

குறித்த குழுவானது, ஜனாதிபதி அவர்களின் தலைமையிலும் மற்றும் பிரதமர் உள்ளிட்ட 05 அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல்
தற்போது காணப்படுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமையால் சேவை யாப்பு மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைமுறை ஏற்பாடுகளின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நேரிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளைக் கையாண்டும், அத்துடன் கடந்தகால அரசாங்கங்களால் எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானத்தின் பிரகாரமும் அடிக்கடி பட்டதாரிகள் மற்றும் ஏனைய ஊழியர்கள் நேரடியாக அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டமையால், ஒட்டுமொத்தமாக அரச சேவை மிகையாக காணப்பட்டாலும் சேவைப் பிரிவுகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக பதிவாகியுள்ளது.

அதேபோல், ஆட்சேர்ப்பின் போது பல்வேறு முறைகளைக் கடைப்பிடிக்கின்றமையால் ஏற்பட்டுள்ள விளைவாக அரச சேவையில் மேலெழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக பொருத்தமான படிமுறைகளை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

அதற்கமைய, மேற்குறிப்பிட்ட விடயங்களை மீளாய்வு செய்து, அரச சேவையை மிகவும் வினைத்திறனாகவும், பயன்வாய்ந்ததாகவும் மேற்கொண்டு செல்வதற்காக மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்கள் தொடர்பாக முன்னுரிமைகளை அடையாளங்கண்டு அவற்றுக்கான கால அட்டவணையை அறிமுகப்படுத்தவும், தற்போது அரச சேவையில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குப் பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு, பிரதமரின் செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...