- அதுவரை அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்படும்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதியை துக்க தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு இது தொடர்பில் ஜனாதிபதியினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதுவரை எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணி 70 ஆண்டுகள் ஆட்சியைத் தொடர்ந்து, நேற்று தனது 96ஆவது வயதில் பால்மோரல் எஸ்டேட் இல்லத்தில் வைத்து காலமானார்.
திடீர் சுகவீனமுற்ற அவர், மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்ட நிலையில் நேற்றையதின் காலமானார்.
இது தொடர்பில், தனது இரங்கலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, "பொதுநலவாய நாடுகளின் தலைவரும், 1952-1972 வரை இலங்கை ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு தொடர்பில் இங்கிலாந்து அரச குடும்பம், இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் இங்கிலாந்து மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்" என அறிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றையதினம் (08) மரணமடைந்த, இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இன்றையதினம் (09) இலங்கை பாராளுமன்றத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Add new comment