- உலகறிந்த நபருக்கு அடையாள அணி வகுப்பு அவசியமில்லையென அறிவிப்பு
அத்துமீறி தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி அலுவலகத்திற்குள் பிரவேசித்து அதன் ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான தானிஸ் அலிக்கு ஓகஸ்ட் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க குறித்த உத்தரவை விடுத்தார்.
ரூபவாஹினிக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு கடந்த வழக்கு விசாரணையில் பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, சந்தேகநபரை இன்று (01) அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய, குறித்த வழக்கு இன்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை உலகம் முழுவதும் அறியும் வேளையில் அடையாள அணிவகுப்பு அவசியமில்லை என நீதவான் குறிப்பிட்டார். அதற்கமைய, அடையாள அணிவகுப்பை இரத்து செய்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, சந்தேகநபருக்கு பிணை வழங்குவதா என்பது தொடர்பில் ஓகஸ்ட் 15ஆம் திகதி தீர்மானிக்கப்படுமென கொழும்பு பிரதான நீதவான் அறிவித்தார்.
கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து அதன் ஔிபரப்புக்கு இடைஞ்சல் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து குருணாகல், வேபட பிரதேசத்தைச் சேர்ந்த தானிஸ் அலி எனும் நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் துபாய் செல்ல முற்பட்ட வேளையில் விமானமொன்றில் வைத்து கடந்த ஜூலை 26ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் தொடர்பில் பொலிஸார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment