நான்கு அமைச்சர்கள் தமது பதவி விலகல் குறித்து அறிவிப்பு

ஹரின், மனுஷ, அமரவீரவுடன் தம்மிக்கவும் இணைவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து தாம் விலகப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அமைச்சர்கள் சிலரும் தமது பதவிகளை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.  நேற்று அவர்கள் தமது இராஜினாமா தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அமைச்சர்களான தம்மிக்க பெரேரா, ஹரீன் பெர்னாண்டோ, மகிந்த அமரவீர, மனுச நாணயக்கார ஆகியோரே தமது அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளனர்.

அதற்கிணங்க முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேரா நேற்று தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அமைச்சர் தம்மிக பெரேரா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதுடன் கடந்த ஜூன் 24ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

அதேவேளை இந்தியாவிலிருந்து கிடைக்கப்பெறும் யூரியா உரத்தை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் தாம் தமது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரும் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளனர்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...