- அரசு பஸ்கள் நேற்று முதல் இயக்கம்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 7 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து பிஆர்டிசி ஊழியர்கள் பணிக்குத் திரும்பி மதியம் முதல் அரசு பஸ்கள் இயங்கத் தொடங்கின. புதுவை அரசு போக்குவரத்துக்கழகமான பிஆர்டிசி டிரைவர்கள், கண்டக்டர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், பணி பாதுகாப்பு கோரியும் கடந்த 23ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. கிராமப்புற பகுதியில் பஸ் வசதியின்றி மக்கள் அவதிப்பட்டனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் போராடக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் போது ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட 12 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து முதல்வருடன் பேசி முடிவெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறிவித்தனர். இதனால் நேற்றும் 7வது நாளாக பிஆர்டிசி ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தது.
இந்த நிலையில், முதல்வர் ரங்கசாமியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் சிவா, சம்பத் எம்.எல்.ஏ மற்றும் போராட்ட குழுவினர் பங்கேற்றனர். அப்போது, 'பணிக்கு திரும்பி பஸ்களை இயக்குங்கள். கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுகிறேன்'என்று முதல்வர் உறுதியளித்தார்.
இதனையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு ஊழியர்கள் பிற்பகலில் பஸ்களை இயக்கினர்.
Add new comment