- தனியார் பஸ்கள், பாடசாலை, சுற்றுலா சேவைகளுக்கு இ.போ.ச. டிப்போவில் எரிபொருள்
- இலக்கத்தகடு இறுதி இலக்கத்தின் அடிப்படையில் தினமும் எரிபொருள்
அத்தியாவசிய தேவை இல்லையெனின் எதிர்வரும் 3 நாட்களுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டாமென, மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜூன் 23, 24ஆம் திகதிகளில் பெற்றோல், டீசலை பெற்றுக் கொள்வதற்காக 90 மில்லியன் டொலர் கடன்கடிதம் திறக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, எதிர்வரும் வியாழக்கிழமை (23) பெற்றோலும், வெள்ளிக்கிழமை (24) டீசலும் கொண்ட கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவித்த அவர், அக்கப்பல்களுக்கு குறித்த தொகை செலுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், சாலை அனுமதிப்பத்திரம் கொண்ட தனியார் பஸ்களுக்கு, இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்களின் ஊடாக எரிபொருளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் நிற்க வேண்டாமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, பாடசாலை சேவைகளில் ஈடுபடும் வாகனங்கள், சுற்றுலா சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கும், தமக்கு அருகில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்களின் ஊடாக எரிபொருளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் இதன் போது தெரிவித்தார்.
வைத்தியர்கள், பொலிஸார் உள்ளிட்ட மிகவும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு அடுத்த வாரம் முதல், தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வௌ்ளிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முழுமையாக போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்களுக்கு, அவற்றின் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்திற்கமைய குறிப்பிட்ட தினங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
Add new comment