நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மண்ணெண்ணெய் இன்மையால் மன்னாரில் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. மீன்பிடி நடவடிக்கைக்கு என மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுவதால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
அதே நேரம் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகவும் சந்தையில் மீன் விலை அதிகரித்துள்ளது. இதனால் மீனவர்கள் உட்பட மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் அண்மைய நாட்களாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடாமையால் சந்தையில் மீன்களின் வருகையும் குறைந்துள்ளது.
மீன்பிடி இன்மை மற்றும் மீன் வியாபாரம் தொடர்ச்சியாக குறைந்துள்ளமையினால் மீன் சந்தைகளை குத்தகை ரீதியாக பெற்று நடாத்தும் குத்தகை தாரர்கள் வருமானம் இன்றி பாதிப்படைந்துள்ளனர்.
எனவே விரைவில் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் போதிய அளவில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டு தருமாறு மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(மன்னார் குறூப் நிருபர்)
Add new comment