க.பொ.த. சாதாரண தர பரீட்சை நிலைய ஊழியர்களுக்கு நேற்று முதல் எரிபொருள் வழங்க விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரீட்சை பணியாளர்களின் தனியார் வாகனங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (22) எந்த நேரத்திலும் இவ்வாறான ஊழியர்களுக்கு டீசலை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் க.பொ.த. சாதாரண தர பரீட்சை பணியாளர்களுக்கு வரிசையில் நிற்காமல் அவர்களுக்கு தேவையான பெற்றோலை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பரீட்சார்த்திகள் பாடங்கள் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் 0112 784 208 அல்லது 0112 784 537 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்கு வருவதே பொருத்தமானதாக இருக்கும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Add new comment