ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் டி.என்.ஏ பரிசோதனைக்காக இன்று (27) காலை அம்பாறை புத்தங்கல பொது மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றது.
மூன்றாவது தடவையாக மேற்கொள்ளப்படவுள்ள இப்பிரேத பரிசோதனையானது அம்பாறை பிரதான மாவட்ட நீதிபதி மற்றும் நீதிவனுமாகிய லுசாகா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரிகளான என்.டபிள்யு.யு. தினுகா மதுசானி மற்றும் ருச்சிர நதீர ஆகியோருடன் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் வனிதா பண்டாரநாயக்க, தடயவியல் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரசன்னத்துடன் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றது.
இந்நடவடிக்கையானது கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் மனைவி புலஸ்தினி மகேந்திரன் (சாரா ஜெஸ்மின்) என்பவர் தொடர்பான DNA பரிசோதனைக்காக சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். அத்துடன் சம்பவ இடத்திற்கு அருகில் ஊடக அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஈஸ்டர் தொடர் தாக்குதல்களின் பிரதான சந்தேகநபரான ஸஹ்ரான் ஹாஷிமின் சகோதரன் மொஹமட் ரிழ்வானால் 26.04.2019 இரவு சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
ஈஸ்டர் தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் சாரா ஜெஸ்மின் இறந்ததாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சாரா தொடர்பான மர்மங்கள் நீடித்து வரும் நிலையில் அவர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சாராவை அடையாளம் காண உடல் உறுப்புகள் DNA சோதனைக்கு உட்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் என வெளியிடப்பட்ட பெயர்களின் விபரங்கள் பின்வருமாறு
- மொஹமட் ஹாஷிம் மொஹமட் றிழ்வான் (ஸஹ்ரானின் சகோதரர்)
- முகமட் நஸார் பாத்திமா நப்னா (றிழ்வானின் மனைவி)
- மொஹமட் ஹாஷிம் மொஹமட் ஜெய்னி/மொஹமட் சின்னா மௌலவி (ஸஹ்ரானின் சகோதரர்)
- ஆதம்லெப்பை பாத்திமா அப்ரீன் (ஜெய்னியின் மனைவி)
- ஹயாத்து மொஹமட் ஹாஷிம் (ஸஹ்ரானின் தந்தை)
- அப்துல் சத்தார் சித்தி உம்மா(ஷஹ்ரானின் தாய்)
- மொஹமட் ஹாஷிம் ஹிதாயா(ஸஹ்ரானின் சகோதரி)
- இப்றாகிம்லெப்பை மொஹமட் றிசாட் (ஸஹ்ரானின் மைத்துனரும், ஹிதாயாவின் கணவரும்)
- அப்துல் ரஹீம் பெரோஸா (சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் மனைவி)
- மஹேந்திரன் புலஸ்தினி/சாரா ஜெஸ்மின் (நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலய தற்கொலை குண்டுதாரி மொஹமட் ஹஸ்தூன் என்பவரின் மனைவி)
- அகமதுலெப்பை மொஹமட் நியாஸ் (தேசிய தௌஹீத் ஜமாத் பிரதான உறுப்பினர்)
- மொஹமட் றிழ்வான் மீரா (றிழ்வானின் மகள்)
- மொஹமட் றிழ்வான் மருவான் சஹீட் (றிழ்வானின் மகன்)
- மொஹமட் ஜெய்னி அமாயா (ஜெய்னியின் மகள்)
- மொஹமட் இமாம் ஹாஷிம்(ஜெய்னியின் மகன்)
- மொஹமட் ஷஹ்ரான் வாசீட் (ஸஹ்ரானின் மகன்)
- மேற்குறித்த 16 பேர் மரணித்தமை உறுதிப்படுத்தப்பபட்ட போதிலும் 17ஆவது நபர் தொடர்பில் உறுதிப்படுத்தப்படவில்லை
இது தவிர இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள்
- மொஹமட் ஸஹ்ரான் ருசைதா (ஸஹ்ரானின் மகள்)
- அப்துல் காதர் பாத்திமா ஹாதியா/ சித்தியா(ஸஹ்ரானின் மனைவி)
சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல் இடம்பெற்று நேற்றுடன் (26) 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன்போது கொல்லப்பட்டதாக கூறப்படும் 17 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக தேடப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணுபரிசோதனை அறிக்கை(DNA) பொருந்தவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மஹேந்திரனின் மரபணுபரிசோதனை அறிக்கை அறிய மீண்டும் சாரா என்ற புலஸ்தினி தப்பி சென்றுள்ளாரா என சந்தேகம் எழுப்பப்பட்டு சர்ச்சைகள் நாளுக்கு நாள் நீடிக்கின்றன.
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஏப்ரல் 21 நடைபெற்ற பின்னர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம பகுதியில் மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த பகுதி வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருந்த ஸஹ்ரான் ஹாஷிமின் தம்பி உட்பட பலரும் கொல்லப்பட்டிருந்தனர்.மேலும் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் அவரது மகள் உயிருடன் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருந்தனர்.
இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.இதன் போது விசாரணையாளர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களளின் மரபணுபரிசோதனை தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளதுடன் குறித்த தாக்குதல் சம்பவத்தில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படும் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்ற பெண்ணின் மரபணு பரிசோதனை மாத்திரம் எந்தவொரு மரபணுபரிசோதனையுடனும் ஒத்துப்போகவில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(பாறுக் ஷிஹான்)
Add new comment