இரு காரணங்கள் தவிர்த்து பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல

வெப்பநிலை பரிசோதிப்பதும் அவசியமில்லை

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று (18) முதல் கட்டாயமல்ல என, புதிதாக இன்றையதினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அறிவித்துள்ளார்.

ஆயினும் பொதுப் போக்குவரத்து மற்றும் மக்கள் ஒன்றுகூடி இடம்பெறும் உள்ளக நிகழ்வுகள் அல்லது செயற்பாடுகளின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட்-19 தொற்றை அடுத்து கடந்த 2020 ஜனவரி 29ஆம் திகதி முதல், அனைத்து மருத்துவ சேவை ஊழியர்களுக்கும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி, அப்போதைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சுற்றறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கு வேளையில், வீதிகளில் பயணிப்போர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, அப்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்பநிலை பரிசோதிப்பது அவசியமில்லை

இது தொடர்பில் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன, கட்டங்களுக்குள் நுழையும்போது உடல் வெப்பநிலையை அளவிடுவது இன்று (18) முதல் கட்டாயமல்ல எனவும், அறிவித்துள்ளார்.

அத்துடன் அவ்வாறு வருகை தருபவர்களின் தகவல்களை பதிய வேண்டிய அவசியமும் இல்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...