அலி சப்ரியே நிதி அமைச்சர்; ஜனாதிபதி இராஜினாமாவை ஏற்கவில்லை

- அமைச்சரவை பதவி விலகல்; புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அடங்கிய வர்த்தமானிகள் வெளியீடு

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நிதி அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்த போதிலும், அவரது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி இன்னும் ஏற்கவில்லை என, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றில் தெரிவித்தார்.

இன்றையதினம் (08) இடம்பெற்று வரும் பாராளுமன்ற அமர்வின்போது உரையாற்றிக் கொண்டிருந்து, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, நாட்டில் நிலையான அரசாங்கமோ, நிதி அமைச்சரோ இல்லையெனவும், எமது நாட்டின் மீதான நம்பிக்கை முழுமையாக இல்லாமல் போயுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

இதன்போது, அதற்கு பதிலளித்த, அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால்களை வளர்த்தல், கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர்
கஞ்சன விஜேசேகர,

"நிதியமைச்சர் என்பவர் இல்லாமல் இல்லை, அமைச்சர் அலி சப்ரி கையளித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி இன்னும் ஏற்கவில்லை. அவர் தொடர்ந்தும் நிதியமைச்சராக செயற்படுகிறார்." என்றார்.

அதற்கு பதில் வழங்கிய ஹர்ஷ டி சில்வா, "அதற்கு விளக்கமளித்தமைக்கு நன்றி. உண்மையில் இது ஒரு ஊக்கமளிக்கின்ற விடயம். குறைந்தபட்சம் அவ்வாறான ஒருவர் உள்ளார் என்பது உலகத்திற்கு தற்போது தெரிந்துள்ளது. அலி சப்ரி அமைச்சர் தான் இதனைத் தெரிவித்திருந்தார்." என்றார்.

 

 

இதேவேளை, அண்மையில் அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியமை தொடர்பான அதி விசேட வர்த்தமானி மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட 4 அமைச்சர்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்களும் நேற்றையதின (07) அதி விசேட வர்த்தமானிகளாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...