கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று தீர்மானம்
முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச உள்ளிட்ட 6பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மே மாதம் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் இலங்கை வந்திருந்த சந்தர்ப்பத்தில், கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக வளாகத்தினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 6பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்றைய வழக்கு விசாரணையின் போது, குறித்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6பேரும் நீதிமன்றில் ஆஜரானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரோஜர் செனவிரட்ன ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
Add new comment