- பரீட்சைகளுக்கான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்
2021 க.பொ.த. உயர் தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிட்டபடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை அறிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் வலயக் கல்விப் பணிப்பாளர்களுடனான சந்திப்பில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் உள்ள சிக்கல்களை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எட்டப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அதற்கமைய, குறித்த இரு பரீட்சைகளும் இடம்பெறும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளின் வினாத்தாள் திருத்தும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 01 - 10 வரை இடம்பெற்று முடிந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளுக்கு, 622,000 பேர் தோற்றியிருந்ததோடு, 4,513 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைfள் இடம்பெற்றிருந்தன. இதில் கலை பிரிவுக்கான பிரயோக பரீட்சைகள் மே மாதத்தில் இடம்பெறவுள்ளன.
இப்பரீட்சை ஆரம்பமாகும்போது கொரோனா தொற்றிய 38 மாணவர்கள் காணப்பட்ட நிலையில் பரீட்சைகள் நிறைவடைந்த வேளையில் 62 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதற்காக நாடு முழுவதும் 40 விசேட நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததோடு, தனிமைப்படுத்தலுக்குட்பட்ட 322 மாவணர்கள் இப்பரீட்சைக்கு தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Add new comment