கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 740ஆக உயர்வடைந்துள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 06 கடற்படையினர், பூரண குணமடைந்து நேற்று (16) வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இக்கடற்படையினரில் 04 பேர் IDH வைத்தியசாலையிலும், ஒருவர் காத்தான்குடி வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் ஹோமாகம வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். மேற்படி வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மேலும் 14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add new comment