- விமான நிலையம் செல்வோர் பயணச்சீட்டை காண்பிக்கலாம்
- பிரதேசங்களின் ஊடான பொது போக்குவரத்து, அத்தியாவசிய தேவைக்கு அனுமதி
புத்தளம், சிலாபம், கொச்சிக்கடை பகுதிகளில் அறிவிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்று (19) காலை 8.00 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நேற்று (18) பிற்பகல் 4.30 மணி முதல், புத்தளத்தின் 11 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும், சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கையை இடையூறின்றி மேற்கொள்ளும் பொருட்டு இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மாஅதிபர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமுலில் உள்ள காலப் பகுதியில் அனைவரும் தங்களது வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள வேளையில், தமது பயணங்களை உச்சபட்சம் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமுலில் உள்ள காலப் பகுதியில் குறித்த பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் பொதுப் போக்குவரத்து சேவை வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கட்டுநாயக்கா விமான நிலையம் செல்லும் பயணிகள், தமது பயணச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகள் வருமாறு,
புத்தளத்தில்
புத்தளம், ஆனமடு, கற்பிட்டி, கருவலகஸ்வெவ, முந்தளம், நவகத்தேகம, பல்லம,
வனாத்தவில்லு, உடப்பு, நுரைச்சோலை, சாலியவெவ,
சிலாபத்தில்
சிலாபம், தங்கொட்டுவை, கொஸ்வத்தை, மாதம்பை, மாரவில, வென்னப்புவ, ஆரச்சிக்கட்டு
நீர்கொழும்பில்
கொச்சிக்கடை
Add new comment